Sunday 16 September 2012

ஆசையில் ஓர் கடிதம்...,


அன்புள்ள தங்கச்சி இனியாக்கு...,

                அக்கா தூயா எழுதும் கடிதம். நான் இங்க நல்லா இருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் நல்லா இருக்காங்க. நான் நல்லா படிக்குறேன். அதுப்போல, நீ, அம்மா, அப்பா, தம்பி, தாத்தா, பாட்டிலாம் நலமா? உன் படிப்பு எப்படி போய்கிட்டு இருக்கு. உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் நலமா?

             என்னடா!, அக்கா ஹாஸ்டலுக்கு போய் எல்லாத்தையும் மறந்துட்டா போலன்னு நினைக்குறது எனக்கு தெரியுது. நான் எதையும் மறக்கலப்பா. இன்னிக்கு உன் ”பர்த்டே”ன்னு எனக்கு நல்லா தெரியும்.  உன் பிறந்த நாளில் நாம் பிரிந்திருப்பது இதுவே முதல் முறை. என்ன செய்வது?! படிச்சு பெரிய ஆளாகி,  நல்லா இருந்து நம்ம பெத்தவங்களை சந்தோசப்பட வைக்கனுமே...

               என்னவோ தெரிலைப்பா, இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கு உன்னை பிரிந்திருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...

                இனியா.., உன்கிட்ட சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குப்பா. 1998 இதே நாளில், தூங்கி எழுந்து பார்த்தா, பக்கத்துல அம்மா இல்லை, தாத்தா, பாட்டின்னு யாரும் இல்லை. அழுதுகிட்டே எழுந்து வந்தால், பெரியம்மாதான் சொன்னாங்க. அம்மாக்கு பாப்பா பொறக்க போகுது, அம்மா, ஹாஸ்பிட்டலில் இருக்காங்கன்னு. பெரியப்பாக்கிட்ட அடம்பிடிச்சு, ஹாஸ்பிட்டல் வந்து அம்மாவை பார்த்தா.., அம்மா வலிக்குதுன்னு அழுதுக்கிட்டு இருந்தாங்க.

       அங்க இருக்க பிடிக்காம நான், வீட்டுக்கு வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல அத்தை வந்து, உனக்கு தங்கச்சி பாப்பா பொறந்திருக்குன்னு சொன்னாங்க. மறுபடியும் ஹாஸ்பிட்டல் வந்து உன்னை பார்த்தேன். ரோஸ் கலர்ல கொழு கொழுன்னு நீ இருந்தே. எல்லாரும் தூயாவைவிட கலர், அழகுன்னு மெச்சிக்கிட்டதை கேட்க எனக்கு என்னவோ போல இருந்துச்சு.

         முகத்தை தூக்கி வெச்சுக்கிட்டு, ஆறுதல் தேடி அம்மா மடில போய்  படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல  அம்மா என்னை நகர்த்திட்டு உன்னை தூக்கி வெச்சுக்கிட்டாங்க. அப்பாக்கிட்ட போனேன், பாப்பாக்கு டிரெஸ்லாம் வாங்கி வரனும்ன்னு என்னை தனியா விட்டுட்டு போய்ட்டார்.

            தூக்கம் வந்துச்சு.., எப்பவும் நம்ம தாத்தா மார்புலயே தூங்கி பழக்கமான எனக்கு, தாத்தாகிட்ட போனால், அழும் உன்னை சமாதான படுத்த, மார்புல போட்டு உன்னை செல்லம், பட்டுன்னு கொஞ்சிக்கிட்டு இருந்தார். ஒருவழியா தூங்கி எழுந்தா நல்ல பசி, பாட்டிக்கிட்ட போனேன். எப்பவும் கதை சொல்லி சாப்பாடு ஊட்டும் பாட்டி, பாப்பாக்கு கஞ்சி காய்ச்சனும் நீயே சாப்பிட்டுக்கோன்னு பிளேட்டுல சாப்பாடு போட்டு போய்ட்டாங்க.

          இப்படி, எங்க போனாலும்.., என் இடத்தை நீ பிடிச்சுக்கிட்டதால உன் மேல எனக்கு கோவம். உன்னை எனக்கு பிடிக்காம போச்சு??!! நீ ஏன் எனக்கு தங்கச்சியா பொறந்தேன்னு “காட்”கிட்ட சண்டைலாம் போட்டேன்.

        ஒருநாள், தாத்தாவும் பாட்டியும் எங்கேயோ போய் இருக்க, நீ, நான், அம்மா மட்டுமே வீட்டில்..., அம்மா, என்னை கூப்பிட்டு.., தூயா! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ பாப்பாவை பார்த்துக்கோ. உன்னை நம்பிதான் விட்டு போறேன். அவ, கீழே விழாம பத்ரமா பார்த்துக்கோன்னு சொல்லிட்டு, நம்மை கட்டில்ல விட்டு  போணாங்க. நான் உன்னை கவனிக்கலை. ஹோம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். அப்போ, நீ என் பென்சிலை பிடிச்சுக்கிட்டு “ங்கா”ன்னு சொன்னே. அது எனக்கு ”அக்கா”ன்னு கேட்டுச்சு.


                                               


         அப்போதாண்டா செல்லம் உன்மேல் எனக்கு பாசம் வர ஆரம்பிச்சது. நீ  அம்மா வயத்துக்குள்ளே இருக்கும்போது, அம்மா அடிக்கடி.... உன் சிரிப்பு, அழுகையை ஷேர் பண்ணிக்கவும், உன்னோடு விளையாடவும் ஒரு பாப்பாவை ”காட்” உனக்கு ”கிஃப்டா” குடுக்க போறார்ன்னு என்கிட்ட  சொல்வாங்க, அது உண்மைதான்னு அந்த நிமிடம் உணர்ந்தேன்.

        அப்போ, உருவான பாசம் இன்று வரை அதிகமானதே ஒழிய குறையலை. சின்ன சின்ன சண்டை நமக்குள் வந்து நாம பேசாம இருக்கும்போது மனசு வலிக்கும். ஆனா, நீ முறுக்கிக்கிட்டு போகும்போது, பெரியவள்ங்குற ஈகோ என்னையும் மீறி வரும். ஆனா, ஸ்கூல்ல வந்து அக்கா, பென்சிலை குடுன்னு கேட்கும்போதோ இல்லாட்டி, உன் ஃப்ரெண்ட்ஸ்களை பத்தி புகார் சொல்லும்போதோ மீண்டும் அக்கான்ற நினைப்பு தலை தூக்கும்.


         நான் உன்னை விட பெரிய பொண்ணு. காலேஜுக்கெல்லாம் போறேன். அதனால, எனக்கு அட்வைஸ் பண்ற தகுதி வந்துட்டுது. நீ ஸ்கூல்ல உன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட வாயாடுறதை நிறுத்தி படிக்குற வேலையை பாரு. நெக்ஸ்ட் இயர் உனக்கு பப்ளிக் எக்ஸாம். நல்ல மார்க் ஸ்கோர் பண்ணாதான் லைஃப்ல நல்லா செட்டில் ஆகலாம்.


        அம்மா, அப்பாவை எதிர்த்து பேசாத. வாய்ஸ் சவுண்ட் குறைச்சுக்கோ. அதிகமா டி.வி. பார்க்காத. தம்பியை பத்திரமா பார்த்துக்கோ, அவனுக்கு விட்டு குடு.., தம்பிக்கிட்ட சண்டை போடாம இரு, டிவி காம்பியரிங் பண்ண வர்றவங்களை போல தமிழை கடிச்சு துப்பாம அழகா தெளிவா பேசு.”ழ”வை நல்லா அழுத்தம் திருத்தமா பேசு. உலகத்துல எந்த மொழியிலயும் “ழ”ன்ற எழுத்து இல்லையாம். அதனால, அதை கொச்சைப்படுத்தாதே.

                                        

        அப்புறம் தூங்கும்போது கால் தூக்கி போட ஆள் இல்லை, பாடம் சொல்லித்தர  நீ இல்லைன்னு நீ சொன்னதா அம்மா சொன்னாங்க. இப்பவாவது என அருமை புரிஞ்சு சண்டை போடாம இரு. எனக்கும் நீ பக்கத்துல இல்லாம கால் தூக்கீ போட்டுக்க ஆள் இல்லாம தூக்கமே வர மாட்டேங்குது.

ஓக்கே டா, எனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு. கிளம்பனும்.
      ஆங்ங் சொல்ல மறந்துட்டேனே, என்னதான் நாம சண்டை போட்டு வீட்டை அதகளம் பண்ணி.., அடி வாங்குனாலும் அடுத்த பிறவியிலயும் நீயே எனக்கு தங்கச்சியா பொறக்கனும். உன் இம்சைகளை நான் தாங்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்குறேன்.

                ஆனா, உன் இம்சைலாம் நான் எப்படி அக்காவா தாங்குறேன்னு ஒரே ஒரு பிறவியில் நீ எனக்கு அக்காவா பிறந்து என் இம்சைகளை நீ தாங்கனும்.
                            
இப்படிக்கு, 
உன் அக்கா,
தூயா.

டிஸ்கி: இனியாக்கு வாழ்த்து சொல்றேன்னு எங்கம்மா போடுற மொக்கையை பார்க்க இங்க போங்க. 

Saturday 8 September 2012

பதிவர் சந்திப்பில் கிடைத்த என் இரு ”ஆண் நன்பர்கள்”

போன மாசம் நடந்த பதிவர் சந்திப்பை பத்தி பலரும் பலவிதமா எழுதிட்டாங்க. ஒருத்தர் சந்திப்புக்கு பின், எங்கம்மாக்கு சகோதர பாசம் கிடைச்சுதுன்னு சொன்னாங்க, நல்ல நட்புகள் கிடைச்சுதுன்னு சிலர் சொன்னாங்க. ஏன் ஃபாலோயர்சும், ஹிட்சும்  அதிகமாச்சுன்னு கூட சிலர் சொன்னாங்க.

 ஆனா, எனக்கு கிடைச்சதை பத்தி நானும் எழுதனுமே. சோ, அதான் எழுதுறேன், ஆனா,  கொஞ்ச லேட்டா. எனக்கு பதிவர் சந்திப்பு மூலமா ரெண்டு ”பாய் ஃப்ரெண்ட்ஸ்” கிடைச்சிருக்காங்க. அவங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்கதானே!?

முதல் “பாய் ஃப்ரெண்ட்”:
 இவரை சந்திப்புலதான் பார்த்தேன். பேரும், படமும் மட்டுமே அறிமுகம். அவர் எழுத்தை நான் வாசிச்சதுக்கூட இல்லை. அம்மாதான் அவரை அறிமுகப்படுத்தினாங்க. அவரை பார்த்ததும் ரொம்ப நாள் பழக்கம் போல பச்சக்குன்னு மனசுல நின்னுட்டார்.

பத்தாத குறைக்கு அவரை பற்றி மேடையில என்னையே பேச சொன்னாங்க. நான் பேசுனதை பார்த்து அவர் வெட்கப்பட்டு சிரிச்ச சிரிப்பு இருக்கே. நான் அதுலயே மெல்டாகி அவரை விரும்ப ஆரமிச்சுட்டேன். கிளம்பும்போதுகூட போன் நம்பர்கள் பரிமாறிக்கிட்டோம். டைம் கிடைக்கும்போது மீட் பண்ணலாம்ன்னு பேசி வெச்சுக்கிட்டோம். இனி அடிக்கடி அவரோட அந்த அழகு சிரிப்பை பார்க்கவும், அவரோட ஆசை வார்த்தைகளை கேட்கவும் போகனும்.

என்ன கெஸ் பண்ணீட்டீங்களா?! நீங்கலாம் யாரு? எல்லாருமே பெரிய பெரிய ஆளுங்களாச்சே?! எஸ் அவரேதான் என் மனதை கவர்ந்தவர். அவர் பெயர் திரு.சென்னைபித்தன் ஐயாதான் முதல் பாய் ஃப்ரெண்ட். 

                                     
(தன் கேர்ள் ஃப்ரெண்ட் பேசுறதை பார்த்து அவர் வெட்கப்படுற அழகை பாருங்களேன்)

ரெண்டாவது பாய் ஃப்ரெண்ட்:
 
இவர் பதிவர் இல்ல. தன்னோட அம்மாக்கு துணையா வந்தவர். வந்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நானே போய் அறிமுகப்படுத்திக்கிட்டு பேச ஆரம்பிச்சோம். சில வார்த்தைகள்லயே என்னை கவர ஆரம்பிச்சுட்டார்.

அப்புறம், பதிவர்கள் சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டு இருந்தத சத்தம் எங்களுக்கு இடைஞ்சலா இருந்ததால, பக்கத்திலிருந்த ஐஸ்கிரீம் கடையில போய் உக்காந்து மனசு விட்டு பேசிட்டு வந்தோம். 

நான் அவர்கிட்ட சொல்லிட்டு கிளம்பும்போது எனக்கு ஃபிளையிங் கிஸ்லாம் குடுத்தார். அம்மா அவசரப்படுத்தியதால் ஃபோன் நம்பர்கூட வாங்கலை. ப்ளீஸ் யாராவது வாங்கி தாங்களேன்.

கண்டிப்பா என் ரெண்டாவது பாய் ஃப்ரெண்டை கண்டுப்பிடிச்சிருக்கவே முடியாதே?! ஏன்னா, நீங்கலாம் என் அம்மாவோட பழகுறீங்களே அதான் அப்பப்போ கிட்னி வேலை செய்யாம போகும்.

என் ரெண்டாவது பாய் ஃப்ரெண்ட் பேரு ஷாம். ஆமினா ஆண்டியோட பையன்.

                                              
 (பாருங்க, தன் கேர்ள் ஃப்ரெண்டுக்கு எப்படி ஃபோஸ் குடுக்குறார்?ன்னு)

என்ன பெரியங்கலாம் வந்திருக்கீங்க. என் செலக்‌ஷன் எப்படி?ன்னு சொல்லுங்களேன்.



Thursday 19 July 2012

அம்மாவின் அடக்குமுறை இனி என்னிடம் செல்லாது...,

அம்மா!  என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சினிமாக்கு போறாங்க நானும் போகவா?
தனியாலாம் போக வேணாம், இந்த வீக் எண்ட்ல அப்பாவோட தம்பி, தங்கச்சியை கூட்டி போய் பார்த்துட்டு வா.

அம்மா! எனக்கு ட்ரெஸ் எடுக்கனும்.., போய் வரவா?
நீ தனியாலாம் போகவேணாம், நானும் வரேன்.

அம்மா! என் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஃபேஸ்புக், ஆர்குட் அது இதுன்னு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியிருக்காங்க. நானும் அக்கவுண்ட்ஓப்பன் பண்ணிக்கட்டுமா?
நீ சின்ன பொண்ணு. அதெல்லாம் வேணாம்.

அம்மா! ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேச எனக்கு மொபைல் வாங்கி தாங்கப்பா.
ஸ்கூல் படிக்குற பிள்ளைக்கு போன் எதுக்கு? எதுவா இருந்தாலும் என் போன்லயே  பேசிக்கோ.

அம்மா! இன்னிக்கு ஒரு நாள் சைக்கிள்ல போகாம ஸ்கூட்டில ஸ்கூல் போய் வரேனே ப்ளீஸ்.
 இன்னும் உனக்கு டிரைவிங்க் லைசென்ஸ் வாங்கலை. அதுக்குள்ள வண்டியா? சின்ன பொண்ணா லட்சணமா சைக்கிள்லயே போய் வா.

அம்மா! நீ இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடப்போறே?
நீ சின்ன பொண்ணு உனக்கு ஏண்டி அரசியல்லாம்?

இப்படி எதுக்கெடுத்தாலும் நீ சின்ன பொண்ணு, நீ சின்ன பொண்ணுன்னு என்னை டபாய்ச்சுக்கிட்டு வந்த என் அம்மா..., இனி டபாய்க்க முடியாது. ஏன்னா, இன்னியிலிருந்து எனக்கு 18 வயசு.

                                                          
இனி, நான் வண்டி ஓட்டலாம், ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்கலாம். போன் வாங்கலாம். பாஸ்போர்ட், விசா வாங்கி வெளிநாட்டுக்கு போயும் படிக்கலாம்.  ஐ ஜாலி! ஜாலி!
                                                
நான் சொன்னதுலாம் சரிதானுங்களே! இனி, அம்மாவோட அடக்குமுறை என்கிட்ட செல்லாதுதானே?!       

டிஸ்கி: தலைப்பு சும்மா அட்ராக்‌ஷனுக்கு.     இன்னிக்கு எனக்கு பர்த் டே. அதனால, கீழ இருக்குற கேக் எடுத்துக்கிட்டு பெரியவங்கலாம் என்னை வாழ்த்துங்க.